Friday, April 19, 2024

 நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


                   

ஆசையாய் என்னுளே ஆண்டவனுக் காக அமைக்கஎண்ணும்

வாசமார் ஆலய வரைபடம் கண்டதும் வந்துநிற்பார்

நாசமே செய்திட நண்ணியோர் ஐவர்; நடுங்கிநிற்பேன்

ஈசனே! என்றுஇவ் இழிநிலை மாறுமென்(று) ஏங்குவனே


                                       🌺🌺🌺


                                 < அரனும் அரவமும்>

                       

இரவில் நடமாடும் இரைதேடி ஊரும்

அரவத்தோ டாடும் அணியும் – உரியுண்டு

பண்ணிசை கேட்டுப் பரவசங் கொள்ளரவு

எண்ணிலெம் ஈசற் கிணை.

(பாம்பு:  ஒலியெழுப்பிக் கொண்டு படமெடுத்து ஆடும், இரவில் இரையைத் தேடு ஊரும்; தோலாகிய  ஆடை உண்டு.  மகுடியின் இசைக்கு மயங்கி ஆடும்.

சிவன்: இடுகாட்டில் இரவில் நடம்புரிவான்; உணவைத் தேடி காளை மேல் ஊர்வான். அடியார்கள் பண்ணோடு பாடும் இசையில் மனம் மகிழ்வான்.)  





Friday, April 5, 2024

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                <>  தழல் <>

                                                  











துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை

மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்

பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்

தன்னடியார் நெஞ்சுள் சொலிக்கும் தழலெனவே.

                                     ************

                                      <> அருள் <>

                     

கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும்

புண்ணியா உன்றன் புகழ்நினைந் தழுவதாய்

எண்ணிடின் அலாலிவ்  வீனனுன் னருள்பெறப்

பண்ணிலேன் ஏதொரு புண்ணியம் ஐயனே.  


                                                                      .......... அனந்த் 6-4-2024





Thursday, March 21, 2024

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 


                               <> அன்பருக்கு அன்பன் <>

               


 தோலை அகற்றியபின் சூழும் நிண(ம்)நரம்பாய்த்

...தோன்றும் உடலை நாளுந்

.....தொடர்ந்து பேணியதைப் போற்றிப் புவியிதனில்

.......சுழலும் அவதி நீங்கக்


காலை உயர்த்தியருள் காட்டும் கரமுடைய

.. கடவுள் உன்னை அண்டிக்

.. காலை பகலந்தி காலம் தவறாமல்

….. கரங்கள் குவிக்கு மன்பர்


மாலை யறுத்திதயத் தேபுக் காங்கவரை

… வாழ்வித் துயர்த்து முன்சீர்

….. வாய்கொண் டுரைத்திடவு மாமோ அடியனுமுன்

….. வாயில் வந்து நின்றேன்


பாலை அளித்துதமிழ்ப் பாடல் மழைபொழியப்

..பாலர்க் குதவு பரமா

..... பாலை நிகர்மொழியள் பக்கல் துணையிருக்கப்

…...பரதம் புரியு(ம்) ஐயே.


(மாலை = மயக்கத்தை, மாயையை; பாலர் – திருஞானசம்பந்தர்; ஐயே = ஐயனே. )

                                                                                  ... அனந்த் 21-3-2024

 


Thursday, March 7, 2024

பாசமறுப்பாய்

 இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்

திருச்சிற்றம்பலம்

<> பாசமறுப்பாய் <> 


 



இராப்பகல் இல்லா இறையுனக்கு யாமோர்

இராத்திரி என்றோர் தினங்குறித்தெம் நெஞ்சார

ஈசனுன்னை ஏத்தி வழிபடுவோம் எம்பந்த

பாசமற வேண்டிப் பரிந்து.

                              **********

                     <> உருகினேனே <> 


     



உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே

.. ஓடிவந் துற்ற என்னைக்

கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்

காத்துநீ கனகம் வேய்ந்த

மன்றினைக் காட்டி மலையையும் காட்டி

மயிலையில் அன்னை யோடு

நன்றுநின் கோலமும் காட்டிநீ ஆண்ட

.. நலத்தினில் உருகி னேனே.

                              **********

அனந்த்  8-3-2024

Thursday, February 22, 2024

 

                                  <>  காப்பாய் <>



                  

                  
AruNachalam.jpg

 அகந்தையின் நீட்சியாம் எண்ணம் அளிக்கும்*

சகத்தினைச் சாசுவதம் என்றே – உகந்திடா

வண்ணமெனைக் காப்பாய் வரைவடிவில் காட்சிதரும்

அண்ணா அருளாழி யே.

(நீட்சி = நீட்டல்; வரை = மலை; நிதம் = நித்யம்சாச்வதம்.)

குறிப்பு: 1. ”எண்ணங்க ளேமனம் யாவினும் நானென்னும்

எண்ணமே மூலமாம் உந்தீபற 

யானாம் மனமெனல் உந்தீபற;

2. அருணமலையைப் பகவான் ரமணர் அருட்கடல் என்று குறித்தல் உண்டு.

அனந்த் 23-2-2024 


Tuesday, February 6, 2024

பதத்தில் இருத்திடுவாய்

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                    <> பதத்தில் இருத்திடுவாய் <>




உனையலால் வேறொரு தெய்வம்இவ் வேழையன் உன்னானெனும்

நினைவினை விட்டிங்கு நீமௌனத் துள்ளே நிலைத்திருந்தால்

தனயனைக் காக்கத் தவறினன் என்றுனைச் சார்ந்துநிற்கும்

மனையவள் உன்னை மதியா ளிதைநீ மறந்தனையோ?

 

மறப்பதும் உன்னை மறந்தத னால்மீண்டும் வந்துலகில்                 

பிறப்பது மேபிழைப் பாகுதல் என்றன் பிழையென்பையோ?

அறத்தர சே!தில்லை அம்பல வா!என்னை ஆளும்ஐயே!

புறத்தொரு பாலினிப் போகா திருத்திடுன் பொற்பதத்தே.


..  அனந்த் 7-2-2024

 

Sunday, January 21, 2024

 இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

               <> இச்சை இல்லான் <>



இச்சை யில்லான் எனக்காட்ட

.. இல்லந் தோறும் எழுந்தருளிப்

பிச்சை இரக்கும் பெம்மானே

.. பிரியா துன்றன் மேனியுறை

பச்சை நிறத்தாள் முன்னமிட்ட

.. பிச்சை போன விதமென்னே?

நச்சை உண்ட நாதாஉன்

.. நடிப்பின் பொருளார் அறிவாரே!

 

…… அனந்த் 22/1/2024

Monday, January 8, 2024

நல்ல தருணம்

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

         

           <> நல்ல தருணம் <>


பார்க்குமிட மெங்கு(ம்)நீ பரந்தொளிர் பாங்கினைப்

….. பாவியேன் அறிந்தி டாமல்

நீர்க்குமிழி அன்னவிவ் வாழ்க்கையை முற்றிலும்

… நிலையென நிற்றல் நோக்கி

ஆர்த்திடுபொற் சிலம்புட(ன்) ஐயநீ தில்லையில்

… ஆடிடும் அழகு காட்டி

ஈர்த்தெனைநீ ஆட்கொள ஈதுநற் றருணமாய்

… எண்ணில்யான் உய்வன் அன்றே.

(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.)..


.... அனந்த் 8/9-1-2024


Saturday, December 23, 2023

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 


        <> ஏக்கம் அறிந்திலையோ? <>



(வாய்பாடு: கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் 

           கூவிளம் புளிமா தேமா)


எங்கிருந் துன்னைநான் எண்ணினும் நெஞ்சினை  

…. எரியினில் மெழுக தாக்கி 

… ஏதுநான் செய்யினும் இறைவ!நீ என்முனம்  

…   இருப்பதாய் உணர வைத்துப்  

 

பொங்கிடும் அன்புடன் புனித!நின் பொற்பினைப்  

…. பொழுதெலாம் பேச வைத்துப் 

……..புன்மையன் என்னைநீ மாற்றிடின் புவியெலாம்  

……….புகழ்ந்திடும் உன்னை அன்றோ?  

 

மங்கையோ டென்முனே வந்தெனைக் காத்திட 

…. வருவதாய்க் கனவு காண்பேன் 

……. எங்கணும் என்றுமே இலங்கிடும் பரம!என்  

………..ஏக்கம்நீ அறிந்தி லாயோ? 

 

கங்கையும் திங்களும் கொன்றையும் சடையில்நின் 

….. கருணையைச் சாற்று மன்றோ? 

….. கனகமா மன்றிலே கதிசுதி சேரவோர் 

…….. களிநடம் ஆடு வோனே. 


  ..... அனந்த் 24-12-2023

Saturday, December 9, 2023

இடபத்தின் அழைப்பு

திருச்சிற்றம்பலம்
 இன்று பிரதோஷ நன்னாள்


       <> இடபத்தின் அழைப்பு <>





அடியார் வேடம் நான்தரித்துன்
.. அருகே நின்றிங்(கு) அரற்றுவது

செடியார் புன்சொல் எனஉனக்குத்
…தெரியு மென்று நானறிவேன்

துடியார் கரத்தோய்! துட்டரையும்
..தூய்மைப் படுத்தும் உனதருளைக்

கொடியார் இடபம் கூறுவது
.. கொண்டே கூட்டம் திரளுமிங்கே!

(செடிஆர் = அற்பமான, குணமில்லாத; துடி = உடுக்கை; கொடி ஆர் = கொடியில் உள்ள.)

  … அனந்த் 10-12-2023





Thursday, November 23, 2023

திருச்சிற்றம்பலம்

இன்று பிரதோஷ நன்னாள்.


                       <> அண்டி வந்தேன் <>


                     


ஆசை மிகுந்துன் அருட்பதம் பற்றிட அண்டிவந்தேன்

ஈச! அருள்தர ஏன்நீ தயங்குவை என்றறியேன்

நீச னெனத்தாய் மகவினை யாங்ஙணும் நீக்குவளோ

தேசுடன் தில்லைத் தலத்தில் நடமிடு தெள்ளமுதே.


                                  🌺🌺🌺


                   <> உவகை ஒளி <>


   

   காலம் இல்லா முழுப்பொருளைக்

   ... கண்டஞ் செய்து பற்பலவாய்க்

   கோலங் கொடுத்துக் குவலயத்தில்

   ... கூட்டி வைக்கும் மாயையதன்

   சாலம் உணர்ந்த ஞானியவன்

   ... சலியா தகத்தில் பன்மையெழும்

 மூலம் நாடி மெய்யுணர்வில்

... மூழ்கி முழுமை உற்றிடுமே.  


    .... அனந்த் 24-11-2023  

Thursday, November 9, 2023

ஒன்று பலவாகி

 


இன்று பிரதோஷ நன்னாள்

          <> யாரே அறிவார்? <>


     ஸ்ரீ சிவகாமி ஸமேத ஸ்ரீ நடராஜர்- கோனேரிராஜபுரம்.jpg
     
ஒருகால்* ஒயிலாய் ஒருகா லுயர்த்தி
.. ஒருகை நிமிர்த்தி உன்பே ரெழிலில்

உருகா என்றன் உளத்தை மெழுகாய்
.. உருகும் படியாய்ச் செய்வாய் மறுகால்

வருவாய் இலிங்க வடிவில் அதனில்
.. மயங்கி நிற்பேன் மற்றோர் போதில்

அருவாய் ஒளிர்வாய் ஐயா! உன்றன்
.. ஆட்டை யாரே அறிய வலரே!

(*ஒருகால் = ஒரு வேளையில்; மறுகால் = இன்னொரு வேளையில்; ஆட்டை = ஆட்டத்தை. சிதம்பரத்தில் ஐயன் உரு, அருவுரு, அரு என்னும் மூன்று வகை நிலைகளில் காட்சிதருவதைக் குறிப்பது. படம்: இணையத்திலிருந்து.)

... அனந்த் 9/10-11-2023 


Wednesday, October 25, 2023

உனது நாடகம்

 


 

திருச்சிற்றம்பலம்

இன்று பிரதோஷ நன்னாள்.


            <> உனது நாடகம் <> 


                           

நானென தெனுமிரு நாண்களைக் கொண்டு

மானிடர் தம்மை ஊனொடு பிணைத்துப்

புலன்களின் அடிமையாய்ப் புவியில் பிறப்பித்(து)

அலைந்திடச் செய்(து)அவர் அவதிபல பட்டாங்(கு)

உலைந்தும் எய்த்தும் உலவிட வைத்(து)அவர்

கலங்கிய மனத்தராய்க் கதறிடுங் காலுன்

காலை அவர்முன் காட்டி அவர்தமை

இன்முகத் தோ(டுநீ ஈர்த்திதைப் பற்றென

நன்னெறி காட்டி நாடகம் ஆடுவ(து)
 ஏனெனக் கேட்க
மானிகர் விழியளே

வாய்திற வாளெனின் யார்பால்

போயிதைக் கேட்போம் புகல்வாய் நீயே!

 

            .. அனந்த் 26-10-2023


Wednesday, October 11, 2023

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

 

           <> யான் அறியேன் <>

                                       

தென்புலி யூரிலே திருநடம் ஆடிடும்

.. தேவ!நீ தொழுமடி யாருக்(கு)

என்னையே தருவனென் றெழில்கரம் நீட்டி

ஈர்த்திடல் கண்டுமிப் பாரோர்

பொன்னிலும் பொருளிலும் தம்முடைப் பொழுதைப்

.. போக்குவர் என்றுயான் அறியேன்

முன்னைசெய் தீவினை அத்துணைப் பெரிதோ

… மொழிவைநீ முதலினும் முதலே.

                      🌸🙏🏽🌸


                                   < மனங்கொள்வீர் >

                 

பணிபலயான் ஆற்றியுன்றன் பாதவிணை பற்றுகையில்

பணிபலஎற் குளவுன்னைப் பார்த்திடப்போ தில்லையெனின்

அணிபலபூண் டருகிருக்கும் அன்னையுனைக் கடியாளோ?

மணிபலசேர் மன்றிலுறை மன்ன!இதை மனம்வையே


                                                                    .... அனந்த் 12-10-2023

Tuesday, September 26, 2023

துணைபுரிவாய்

 

இன்று பிரதோஷ நன்னாள்.


திருச்சிற்றம்பலம் 




                          


 

       <> துணைபுரிவாய் <>

 

படித்தவர்பால் சென்று பரமனுனைப்

.. பணிவகையைப் பயிலா நாயனையேன் 

 

நடித்திடுவேன் நல்லோன் எனப்பிறர்முன்

.. நகையுடன்நீ அதனைக் கண்டுமென்னை

 

அடிக்காதுன் தாள்பால் அணுகுதற்(கு)

.. அனுமதியும் அளித்தாய் ஆங்கதனால்

 

துடிக்கின்றேன் உன்றன் அருட்பெருக்கின்

…திறம்நினைத்துப் புலியூர்த் தூமணியே

 

 

                                                      ……. அனந்த் 26-9-2023

Monday, September 11, 2023

 இன்று பிரதோஷ நன்னாள். 

திருச்சிற்றம்பலம்

 

        <> புலியூர்த் துரை <>

 

 

                                 Natarajar_at_chidambaram-2.jpg

 

முழங்கிடும் துடியொடும் முடியணி மதியொடும்

…. முத்தொழில் புரிந்து ஞானம்

 

வழங்கிடும் கரத்துடன் மன்றினில் நடமிடும்

.. வள்ளலே அடியர் உள்ளப்

 

பழங்குடில் தொறுமெழுந் தருளுமெய்ப் பொருளுன

.. பாங்கினைப் பகரல் ஆமோ?

 

செழுங்கதிர் எனவொளிர் சிவபுரத் தரச!எம்

.. செல்வமே புலியூர்த் தேவே!

 

(பொருளுன = பொருள் உனது)    

 

……………..  அனந்த் 12-9-2023